தேன் கூட்டில் கை வைத்த கதையாக, ரஷ்யாவே எதிர்பாராத வகையில், ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ஸ்பைடர் வெப் தாக்குதல், இருநாடுகளுக்கு இடையேயான போரை மேலும் தீவிரமாக்கி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ரஷ்யா- உக்ரைன் போரில், குறிப்பிடத் தக்க திருப்பமாக, ரஷ்யாவின் முக்கிய ராணுவ விமான தளங்களை உக்ரைன் தாக்கி அழித்துள்ளது.
இஸ்தான்புல் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் முன்பு நடந்த ஸ்பைடர் வெப் தாக்குதலை புத்திசாலித்தனமானது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டியிருந்தார். ரஷ்ய இராணுவம் எல்லாவற்றையும் இழந்துவிட்டது என்றும், ரஷ்யா உக்ரைனிடம் தோற்று விட்டது என்றும் மேற்கத்திய ஊடகங்கள் எழுதியுள்ளன.
ஸ்பைடர் வெப் தாக்குதல் நடந்த 72 மணி நேரத்துக்குள் ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட உக்ரைனின் ராணுவ முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.
.2,000க்கும் மேற்பட்ட உக்ரைன் இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டுள்ளனர். உக்ரைனின் இராணுவத் தளவாடங்கள்,ஆயுத சேமிப்பு கிடங்குகள் உட்பட நாட்டின் மின் உள்கட்டமைப்புகள் மீது குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளன.
“சாத்தான்-2” ஏவுகணைகள் உட்படத் தான் வைத்துள்ள பேரழிவு ஆயுதங்களை உக்ரைனுக்கு அப்பாலும் ஐரோப்பிய நாடுகளைக் குறிவைத்துச் செலுத்த ரஷ்யா முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் RS-28 சர்மாட் ஏவுகணையின் செல்லப் பெயர் சாத்தான் ஆகும். அதன் அழிவுத் திறனுக்காகச் சர்வதேச நாடுகளால் சாத்தான் என்று அழைக்கப் படுகிறது. RS-28 சர்மாட் ஒரு திரவ எரிபொருளால் இயக்கப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணை 15 க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். ஒரே தாக்குதலால் பல நகரங்களை அழிக்கும் ஆற்றலை உள்ளடக்கியதாகும்.
2022 ஆம் ஆண்டு, RS-28 சர்மாட் கண்டம் பாயும் ஏவுகணையின் செயல்பாட்டு நிலைநிறுத்தலை அறிவித்த ரஷ்ய அதிபர் புதின், அடுத்து வரும் 40 ஆண்டுகளில் ரஷ்யாவின் அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைத் தடுக்கும் வான் பாதுகாப்பை அமெரிக்காவால் உருவாக்க முடியாது என்றும் கூறினார்.
சாத்தான்-2 என்று அழைக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட RS-28 சர்மாட் ஏவுகணை 18,000 கிலோமீட்டர் வரை சென்று தாக்க கூடிய திறன் கொண்டதாகும். இது ரஷ்யாவின் ஆயுதக் களஞ்சியத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றாகும். உக்ரைனுக்கு உதவும் நேட்டோ நாடுகளுக்கு இறுதி எச்சரிக்கையாகக் கடந்த ஆண்டு, ஓரெஷ்னிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக ரஷ்யா நடத்தியது.
புதினைப் பொறுத்தவரை, உக்ரைனுடனான போர் நேட்டோவை ரஷ்யா எல்லையிலிருந்து அப்புறப் படுத்துவதுதான். எனவே தான் போர் தொடங்கியதிலிருந்தே நிதானத்தைக் கடைப்பிடித்து எப்போதும் அளவான முறையில் பதிலளித்துள்ளார்.
போரால் அழிந்து வரும் உக்ரனை மீண்டும் கட்டி எழுப்புவதறகான பட்ஜெட் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். போர் நீண்ட காலம் நீடிக்க,நீடிக்க மறுகட்டமைப்புக்கான பில் பெரியது. மறுகட்டமைப்பது என்பது உக்ரைனை தனியார்மயமாக்குவது தான். இதில் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் போட்டியில் உள்ளன.
ஒரு ட்ரில்லியன் ரியல் எஸ்டேட் வாய்ப்பை ட்ரம்ப் எதிர்பார்க்கிறார். அதிக பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. அதிக ஊடக கவரேஜ் மற்றும் அதிகப் பணத்தை ஜெலென்ஸ்கி விரும்புகிறார்.
ஒரு கையில் ஐரோப்பிய ஒன்றியம், இன்னொரு கையில் ட்ரம்ப். இதில் ஜெலன்ஸ்கி சாமர்த்தியமாக விளையாடுகிறார். ரஷ்யாவின் பொறுமையை ஒவ்வொரு நாளும் சோதித்து வந்த ஜெலென்ஸ்கி முழு உலகத்தையும் மூன்றாம் உலகப் போருக்குத் தள்ளியுள்ளார்.
ஒப்பிடமுடியாத அழிவு சக்தியுடன் கூடிய சாத்தான் 2 போன்ற சக்திவாய்ந்த ஏவுகணைகளை ரஷ்யா இறுதி ஆயுதமாகப் பயன்படுத்தினால், நினைத்துப் பார்க்க முடியாத அழிவை உலகம் சந்திக்க நேரிடும்.
பல்வேறு நாடுகள் அழியும், பெரும்பாலான மக்கள் அழிந்து, பூமியின் பெரும்பகுதி வாழத் தகுதியற்றதாக மாறிவிடும். ரஷ்ய அதிபர் புதின் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது உலகம் என்றால் மிகையில்லை.