ஆப்ரேஷன் சிந்தூரில், பாகிஸ்தானின் பெஷாவர் முதல் குஜ்ரான்வாலா வரை அந்நாட்டின் அனைத்து இராணுவ மையங்களையும் பிரம்மோஸ் ஏவுகணை மூலம் இந்தியா தாக்கி அழித்தது. பிரம்மோசை தொடர்ந்து, ஆயுத கிடங்கில் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரித்த 155 MM பீரங்கி குண்டுகளைச் சேர்த்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தன்னிறைவை அடையும் நோக்கில் இந்தியா வேகமாகச் செயலாற்றி வருகிறது. 2018 ஆம் ஆண்டிலேயே, இந்தியாவின் முதல் உள்நாட்டு, நீண்ட தூரப் பீரங்கி துப்பாக்கி குண்டான “தனுஷ்” உருவாக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO அடுத்த தலைமுறை பீரங்கி வெடிமருந்துகளின் நான்கு வகைகளை வெற்றிகரமாகத் தயாரித்துள்ளது.
High-Explosive மற்றும் இரட்டை தன்மை உடைய Improved Conventional Munition ஆகிய மேம்படுத்தப்பட்ட வெடிமருந்து மற்றும் வெடிகுண்டுகளின் சோதனைகள் வெற்றிகரமாக முடிந்ததை DRDO உறுதிப்படுத்தியுள்ளது.
ஒவ்வொன்றும் சுமார் 45 கிலோ எடை கொண்ட இந்த பீரங்கி குண்டுகள் 32 கிலோமீட்டர் வரை சென்று தாக்கக் கூடியதாகும். இரண்டு அடி நீளமுள்ள இவை, சர்வதேச தரங்களை விடவும் உயர்தரம் கொண்டதாக உருவாக்கப் பட்டுள்ளது.
போர்க்களத்தில் ஒரு இலக்கை தாக்கி அழிக்க, சராசரியாக 1.7 குண்டுகளே போதுமானதாக இருப்பதால், இது, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பீரங்கி குண்டுகளை விட அதிக திறன் கொண்டதாகும்.
இது போலப் பல புதுமையான சிறப்பம்சங்கள் கொண்ட பீரங்கி குண்டுகளின் வரம்பு 8 முதல் 38 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப் பட்டுள்ளன. இந்தியாவின் NavIC செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பு மட்டுமில்லாமல், GPS உடனும் இணைந்து செயல்படும் வகையில் இந்த பீரங்கி குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிக தீவிரம் கொண்ட போர்க்களத்தில், இணை சேதத்தை வேகமாகக் குறைக்கும் என்றும், இலக்கை துல்லியமாகத் தாக்கும் என்றும் கூறப்படுகிறது. வரும் நவம்பர் மாதத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 155 MM பீரங்கி குண்டுகளின் இறுதிகட்ட சோதனைகளை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.
இந்த குண்டுகளைப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய ரிலையன்ஸின் Jai Ammunition மற்றும் Yantra India ஆகிய நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் ரிலையன்ஸ் நிறுவனம், திருபாய் அம்பானி பாதுகாப்பு நகரத்தை (DADC) தீவிரமாக உருவாக்கி வருகிறது. இதன் உற்பத்தி திறன் ஆண்டுதோறும் 2, 00,000 பீரங்கி குண்டுகள், 10,000 டன் வெடிபொருட்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிநவீன வசதிகளுடன், தெற்காசியாவிலேயே மிகப்பெரிய பீரங்கி குண்டுகள் தயாரிக்கும் மையமாக இது மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த ஆண்டு சவுதி அரேபியாவுடன் இந்தியாவின் Munitions India நிறுவனம் 225 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பீரங்கி வெடிமருந்துகள் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இது உலகளாவிய ஆயுத சந்தையில் இந்தியாவின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. கூடுதலாக, ரஷ்யா- உக்ரைன் போரில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட High-Explosive வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பீரங்கி வெடிமருந்து சந்தை மட்டும் அடுத்த பத்தாண்டுகளில் 10,000 கோடிக்கு மேல் மதிப்புடையதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.மலிவு விலையில், நம்பகமான பாதுகாப்பு உபகரணங்களைத் தேடும் வளரும் நாடுகள் ஏற்கனவே இந்தியாவுடன் ஆயுத வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டியுள்ளன.
பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தித் திறன்களை மேம்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சர்வதேச நிறுவனங்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், உள்நாட்டில் தயாரித்த மேம்பட்ட 155 MM பீரங்கி குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் வெற்றிகரமான அறிமுகப்படுத்தப்பட்டு, பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளது.
கட்டுப்பாட்டுக் கோட்டில் சீனாவும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தானும் போருக்கான சூழலைத் தொடர்ந்து உருவாக்கி வரும் நிலையில், உள்நாட்டுப் பீரங்கி குண்டுகள் உற்பத்தி தற்சார்பு இந்தியாவின் வெற்றியைக் காட்டுகிறது.
155 MM பீரங்கி குண்டுகள் உற்பத்தி, இராணுவ ,பொருளாதார மற்றும் ராஜதந்திர ரீதியாகவும் இந்தியாவுக்கு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறியுள்ள பாதுகாப்புத் துறை வல்லுநர்கள், மேம்பட்ட ஆயுத தளவாடங்கள் உற்பத்தியில் வலிமையான வீரனாக இந்தியா தன்னை நிலைநிறுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.