ராணுவத்தையோ, ராணுவ வீரர்களையோ அவமதித்துப் பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது என மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு பாரத ஒற்றுமை யாத்திரையின்போது அருணாச்சலப்பிரதேச எல்லையில் இந்திய ராணுவ வீரர்களைச் சீனா தாக்கியதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த லக்னோ சிறப்பு நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தவொரு தனி நபரையோ அல்லது நம் ராணுவத்தையோ அவதுாறு பேசும் உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ராகுலின் கருத்துகள் நமது ராணுவ வீரர்களை மனதளவில் பாதிக்கும் வகையில் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், லக்னோ சிறப்பு நீதிமன்றத்தின் சம்மனுக்கு எதிரான ராகுல் காந்தியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.