மரக்காணம் கலவரத்தில் ஏற்பட்ட இழப்பை பா.ம.க.விடம் இருந்து வசூலிப்பது தொடர்பான விசாரணையை 8 வாரங்களில் நடத்தி முடிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில், கடந்த 2013ல் வன்னியர் சங்கத்தினர் நடத்திய சித்திரைத் திருவிழாவின்போது, மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீவைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பா.ம.க.விடம் வசூலிப்பது தொடர்பாக, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணை, தமிழ்நாடு பொதுச் சொத்து சேதம் தடுப்பு சட்டத்தைப் பின்பற்றி நடத்தப்படவில்லை எனவும் இறுதி உத்தரவு பிறப்பிக்கத் தடை கோரியும் பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
சட்ட விதிகளைப் பின்பற்றி விசாரணை நடத்தாததால் இழப்பீடு கோரி டாஸ்மாக் நிர்வாகம், போக்குவரத்துக் கழகங்கள் அளித்த விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த நிலையில், அச்சத்தின் அடிப்படையில், வருவாய் நிர்வாக ஆணையரின் விசாரணையைத் தடுக்கும் நோக்கில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், சட்ட விதிகளின்படியும் விசாரணை நடத்தப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை நடத்தி, 8 வாரங்களில் இறுதி உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.