ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தப்பி செல்ல முயன்ற கொள்ளை கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற காரை போலீசார் விரட்டி சென்றனர். அப்போது, காரில் இருந்தவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தனர். காருக்குள் கொள்ளை கும்பல் இருப்பதை அறிந்த போலீசார், உடனடியாக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், ஒருவரின் தொடை மீது குண்டு பாய்ந்தது. இருந்தபோதிலும், காரை நிறுத்தாமல் சென்ற கொள்ளை கும்பலை போலீசார் விரட்டிச் சென்றனர். சிறிது தூரம் சென்ற கொள்ளை கும்பல், சாலையோரம் காரை நிறுத்தி விட்டு தப்பி சென்றது.
வனப் பகுதிக்குள் தப்பி ஓடிய கொள்ளையர்களை ட்ரோன் கேமராக்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், குண்டு காயத்துடன் யாராவது சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகங்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.