திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் நடந்த பிரமோற்சவ தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் அருகே திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலில் சனீஸ்வரன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா கடந்த மே 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், தங்க ரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தரும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. செண்பக தியாகராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தேர்களில் எழுந்தருளினர். பின்னர் 5 தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த தேரோட்ட விழாவில் புதுச்சேரி அமைச்சர் சாய் சரவணன், திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் சிவா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.