மதுரையில் பிற மாநாடுகளுக்கு அனுமதி அளித்தபோது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் அரங்கு அமைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில் ஆஜரான அரசு தரப்பு, மாநாட்டில் அறுபடை கோயில்களின் மாதிரி அமைப்புகள் அமைத்து வழிபாடு நடத்தினால், அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தது.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில், அரங்கு அமைத்து காலை, மாலை என 2 மணி நேரம் மட்டுமே வழிபாடு நடத்த உள்ளதால் அனுமதி வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதே பகுதியில் பிற மாநாடுகளுக்கு அனுமதி அளித்தபோது, தற்போது மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
அரங்கு அமைக்க அனுமதி மறுத்து, அரசு தரப்பு கூறிய காரணங்கள் ஏற்புடையதல்ல எனத் தெரிவித்த நீதிபதி, காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும், அரசியல் சார்புடன் செயல்பட கூடாது எனவும் அறிவுறுத்தினார்.
மேலும் மனு குறித்து, மதுரை மாநகர காவல் ஆணையர், பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.