திருச்செந்தூரில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கூலித் தொழிலாளியை போக்குவரத்து உதவி ஆய்வாளர் கன்னத்தில் அறைந்ததால், ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள வீர மகேந்திர கோட்டை தெருவை சேர்ந்தவர் பெயிண்டிங் கூலி தொழிலாளியான பட்டு இசக்கி. இவர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள டீக்கடை அருகே ஊதியம் வாங்குவதற்காக சக பணியாளர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சதீஷ், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் நின்றுகொண்டிருக்கும் இருசக்கர வாகனத்திற்கு எதற்கு அபராதம் விதிக்கிறீர்கள் எனக்கேட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் சதீஷ் இருசக்கர வாகனங்கள் மீதிருந்த உணவு பைகளை தட்டிவிட்டதுடன், கூலி தொழிலாளியான பட்டு இசக்கியை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதையடுத்து சக பணியாளர்களும், அப்பகுதி மக்களும் போக்குவரத்து உதவி ஆய்வாளரை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் சம்மந்தப்பட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.