சென்னையில் கட்டடக் கழிவுகளைச் சாலையில் கொட்டினாலும், கட்டுமானப் பணிகளின் போது பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில், மாநகராட்சி சார்பில் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை மேலாண்மை செய்தல் தொடர்பாக வரையறுக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த பயிலரங்கத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணி நடைபெற்றதாகத் தெரிவித்தார். மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கட்டடக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான தீர்மானம் வரும் 21ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறினார்.
மேலும், 15 மண்டலங்களிலும் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதற்காக தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேயர் பிரியா குறிப்பிட்டார்.