குவாரி உரிமதாரர்கள் நூறு சதவீத தொகையை இழப்பீடாகச் செலுத்தும்படி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் 2016 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாகச் செலுத்தும்படி, குவாரி உரிம தாரர்களுக்குத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனை எதிர்த்து குவாரி உரிமம் பெற்றிருந்த 82 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வெட்டி எடுக்கப்பட்ட கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதனால், இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தும் படி அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
அரசின் கடிதம் கிடைத்த இரண்டு மாதங்களில் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்குகளை முடித்து வைத்தார்.