மேகாலயாவில் தனது மனைவியுடன் தேனிலவு கொண்டாடிக் கொண்டிருந்த கணவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த புதுமணத் தம்பதியர்? என்ன நடந்தது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தூரைச் சேர்ந்த 28 வயதான ராஜா ரகுவன்ஷி மற்றும் 24 வயதான சோனம் ஆகியோருக்கு கடந்த மே 11 ஆம் தேதி தான் திருமணம் நடந்தது. கடந்த மே 20 ஆம் தேதி தேனிலவுக்காகப் புதுமணத் தம்பதியர் மேகாலயாவுக்குச் சுற்றுலா சென்றனர்.
Insta சமூக ஊடகத்தில் பிரபலமாக்கப்பட்ட மேகலாயாவின் Living Root Bridges என்ற இடத்தைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டனர். Travels தொழிலில் ராஜா இருந்ததால், செல்லும் இடங்கள் பற்றிய முழு தகவல்களையும் சேகரித்துக் கொண்டு, தங்கள் தேனிலவு பயணத்தை மிகக் கவனமாகத் திட்டமிட்டனர்.
குவஹாத்தி வழியாக ஷில்லாங்கிற்கு வந்த இந்த தம்பதியர் அங்கிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிரபுஞ்சிக்குச் சென்றனர். கடந்த மே 22 ஆம் தேதி, மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிகத் தூய்மையான கிராமம் என்று கூறப்படும் Mawlynnong மவுலியாக்கியாட் கிராமத்துக்கு வந்தனர்.
அங்கிருந்து Nongriat நோங்கிரியாட் என்னும் கிராமத்துக்குச் சென்றனர். பிறகு அந்த கிராமத்தில் உள்ள தனியார் விருந்தினர் இல்லத்தில் புதுமணத் தம்பதியர் தங்கினர். மறுநாள் காலை, அங்கிருந்து கிளம்பிய புதுமணத் தம்பதியரின் தொலைப்பேசி SWITCH OFF செய்யப் பட்டிருந்தது. இது குறித்து, அவர்களுடைய குடும்பத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
கடந்த மே 24 ஆம் தேதி புதுமணத் தம்பதியர் வாடகைக்கு எடுத்திருந்த ஸ்கூட்டர், ஷில்லாங் மற்றும் சிரபுஞ்சி இடையே கண்டெடுக்கப்பட்டது. ஸ்கூட்டரில் உள்ள GPS மூலம் அவர்கள் Wei Sawdong அருவி உள்ள பகுதியை நோக்கிச் சென்றதைக் காட்டியது.
காணாமல் போன 8 நாட்களுக்குப் பிறகு, அருவிக்கு அருகே ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப் பட்ட உடலின் கையில் “ராஜா” என்ற பெயர் பச்சை குத்தியிருந்ததை வைத்தும் மணிக்கட்டில் இருந்த ஸ்மார்ட் வாட்சை வைத்தும், ராஜாவின் சகோதரர், உடலை அடையாளம் காட்டியுள்ளார்.
பழங்குடியினர் பயன்படுத்தும் DAO டாவ் எனும் கத்தியால் ராஜா கொலை செய்யப்பட்டதை உறுதிப் படுத்திய காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு, கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் ராஜாவின் செல்போனையும் கைப்பற்றியுள்ளது.
கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், ராஜாவின் கழுத்தில் இருந்த செயின்,மோதிரங்கள், பர்ஸ், காணாமல் போயிருந்தன. மேகலாயாவில் 500 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகி மோசமாக வானிலை இருப்பதால், தேடுதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தம்பதியரின் குடும்பத்தினர் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையில், இந்தூரில் ராஜாவுக்கு நீதிகேட்டு, நான் இறக்கவில்லை; கொல்லப்பட்டேன்; சிபிஐ விசாரணை வேண்டும்; மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்ளும் ராஜாவின் ஆன்மா என்ற வாசகங்கள் அடங்கிய பெரிய சுவரொட்டிகள் வெளியிடப் பட்டுள்ளது.
ராஜாவின் உடலைக் கண்டுபிடித்த போதிலும், அவரது மனைவி சோனம் என்ன ஆனார் ? அவர் கடத்தப்பட்டாரா ? என்ற கேள்விக்கு இன்னும் விடைதெரியவில்லை. தேனிலவு தம்பதியரைக் குறிவைத்து, கணவரைக் கொன்றுவிட்டு இளம் மனைவியரைக் கடத்தும் ஒரு கும்பல் அந்தப் பகுதியில் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கடந்த மாதம், மற்றொரு புதுமண ஜோடி காணாமல் போனதாகவும், ஒரு வெளிநாட்டவர் கொலை செய்யப்பட்டதாகவும், இது குறித்த புகார்களை காவல்துறையினர் பதிவு செய்யவில்லை என்றும் உள்ளூர் மக்கள் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.