மணிப்பூரில் மெய்தி பிரிவின் அரம்பாய் தெங்கோல் குழுவைச் சேர்ந்த முக்கியத் தலைவரான கனன் சிங் என்பவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் வெடித்ததால், அங்கு 5 நாட்களுக்கு இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் சனிக்கிழமை இரவு மெய்தி பிரிவின் அரம்பாய் தெங்கோல் உறுப்பினர் குழுவைச் சேர்ந்த முக்கியத் தலைவரான கனன் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான தகவல் பரவியதும் மெய்தி குழுவைச் சேர்ந்த ஏராளமானோர் வீதிகளில் இறங்கி டயர்களை கொழுத்தி போராடினர்.
அப்போது கிராம தன்னார்வலர்கள் என்ற போர்வையில் மெய்தி கிராமங்களை தாக்கிய குக்கி இன கிளர்ச்சியாளர்களை கைது செய்வதுடன், கனன் சிங்கை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து சட்டம் – ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டு, இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் 5 நாட்களுக்கு மொபைல் மற்றும் இணையதள சேவைகளை நிறுத்துவதாக மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.