கோத்தகிரியில் சாலையை கடந்து சென்ற கரடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் கரடிகள் அங்கிருக்கும் பொருட்களை உடைத்து சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கோத்தகிரி அருகே சாலையை கடந்து தேயிலை தோட்டத்திற்கு கரடி செல்லும் காட்சியை அங்கிருந்த வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இது வைரலான நிலையில், தேயிலை தோட்டத்தில் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.