கோவையில் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்ற முயன்ற கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் கருமத்தம்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவர், அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரிடம் 50 ஆயிரம் பணம் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார்.
அதனை நம்பிய முத்துக்குமார், பணத்துடன் உதயகுமார் வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து அவரிடம் 50 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு வெற்றுத் தாள்கள் அடங்கிய பணக்கட்டில் முன்னும் பின்னும் போலியான 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் தாள்களை வைத்து கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் போலீசாருக்கும் தகவல் அளித்தார். இதையடுத்து போலீசார் செல்வதற்கு முன்பே உதயகுமார் உள்ளிட்ட 5 பேர் போலி ரூபாய் நோட்டு கட்டுகளுடன் காரில் தப்ப முயன்றனர்.
தொடர்ந்து இளவரசன் என்பவரை கைது செய்த போலீசார், 4 மூட்டைகளில் இருந்த போலி ரூபாய் நோட்டு கட்டுகள், லேப்டாப், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.