நாமக்கல்லில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி நகை பணத்திற்காக குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பரமத்தி வேலூர் அடுத்துள்ள சித்தம்பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி, விவசாயம் செய்து கொண்டு தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை வீட்டின் வெளியே கட்டிலில் அவர் தூங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் நகை, பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் கூச்சலிட்டதால் கத்தியால் கழுத்து, வாய், முகத்தில் சரமாரியாக குத்திவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்த பக்கத்தில் உள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலம் மூதாட்டி தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் மூதாட்டியை மீட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் சேலம் சரக டிஐஜி உமா ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.