பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷமான இன்று அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக செய்து பஞ்ச முக தீபாராதனை நடைபெற்றது.
வைகாசி மாத வளர்பிறை பிரதோஷமான இன்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு மஞ்சள் தூள், வீபூதி, குங்குமம், அபிஷேக தூள், சீயக்காய் தூள், தேன், தயிர், சந்தனம் மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சாமந்தி, சம்பங்கி, கோழிக்கொண்டை, வில்வ இலை, தவணம், வெள்ளை சாமந்தி, மஞ்சள் சாமந்தி உள்ளிட்ட வண்ண வண்ண மலர்களால் மலர் மாலைகள் சாற்றப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மழையில் நனைந்து கொண்டே அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.பிரதோஷ தினத்தில் நந்தி பகவானை வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்றும், குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆதலால் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷமான இன்று அண்ணாமலையார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.