பட்டியலினத்தவர்களைக் கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக பட்டியலின மாநில செயற்குழு உறுப்பினர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக பட்டியலின மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி தலைமையில் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது, போராட்டக்காரர்களுடன் பாதுகாப்பில் இருந்த காவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, 4 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரியைச் சந்திக்க போலீசார் அனுமதி அளித்தனர்.
பின்னர், பாஜக பட்டியலின மாநில செயற்குழு பூபதி தலைமையிலான குழுவினர் அதிகாரியைச் சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியாண்டிச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாகப் பலமுறை புகார் மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், குறிப்பிட்ட சமூகத்தினர் பட்டியலினத்தவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றனர் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுத்து கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.