திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அரசுப்பள்ளியில் சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயமடைந்தனர்.
நத்தம் அருகே லிங்கவாடியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு வழக்கம் போல் சத்துணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது.
அப்போது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரில் திடீரென கசிவு ஏற்பட்டு வெடித்தது. இதில் சமையலராக பணியாற்றிய ஜோதியம்மாள் மற்றும் உதவியாளர் சரசு ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
பின்னர் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிலிண்டர் வெடித்த விபத்தில் சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தன.
விபத்து குறித்து வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.