சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் தேரடி படிகளில் 3 லட்சம் தேங்காய்களை உடைத்து பக்தர்கள் விநோத வழிபாடு நடத்தினர்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஒன்பதாம் நாள் திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையடுத்து நான்கு ரத வீதியில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.
பின்னர் அங்குக் கூடியிருந்த பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும், நோய் குணமடைய வேண்டியும் சுமார் 3 லட்சம் தேங்காய்களைக் காணிக்கையாகத் தேரடிப் படிகளில் வீசி எறிந்து உடைத்தனர்.
அப்போது ஏராளமானோர் சிதறிக் கிடந்த தேங்காய்களை முண்டியடித்துக் கொண்டு எடுத்தனர். மேலும் ஹெல்மெட் அணிந்துகொண்டு 100க்கும் மேற்பட்டோர் வீசி எறியப்பட்ட தேங்காய்களைச் சேகரித்தனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.