திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் பலத்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் படிப்படியாக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் பாதுகாப்புக்கருதி அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இரவு முழுவதும் மின் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்த நிலையில் சாலையில் அறுந்துகிடந்த மின்கம்பங்களைச் சீரமைக்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.
மேலும் பலத்த காற்றால் சாய்ந்த மரங்களை ஜேசிபி உதவியுடன் தீயணைப்புத்துறையினர் அப்புறப்படுத்தினர். மரங்களும், மின்கம்பங்களும் அப்புறப்படுத்தப்பட்ட இடங்களுக்கு மின்சாரம் படிப்படியாக வழங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது