தேசிய முதியோர் மையங்கள் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சாலையோரங்களில் முதியோர்களைத் தவிக்கவிட்டுச் செல்லும் நிலை உள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையங்களை அமைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், முதியோர்களைப் பாதுகாப்பது அரசின் கடமை எனத் தெரிவித்தனர்.
அத்துடன் மத்திய அரசு தரப்பு மற்றும் தமிழக சமூக நலத்துறையின் முதன்மைச் செயலர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும், தேசிய முதியோர் மையங்கள் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.