நீலகிரி மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழையும் யானைகளை கண்டறிந்து விரட்டும் வகையில் வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக காட்டு யானைகள், கரடி, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர் கதையாகி உள்ளது. மனித விலங்கு மோதலை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் நுழையும் காட்டு யானைகளை துல்லியமாக கண்டறிய தமிழக அரசு சார்பில் கூடலூர் வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் வனவிலங்குகளின் வெப்பத் தன்மையை கண்டறிந்து, அகச்சிவப்பு கதிர்வீச்சை பயன்படுத்தி கேமராக்கள் படம் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கேமராக்களை எல்லை பாதுகாப்பு படை, ராணுவம், காவல்துறை மட்டுமே பயன்படுத்தி வந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.