போச்சம்பள்ளி அருகே தனியார் பள்ளி பேருந்தின் உள்ளே பட்டாசுகள் வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளர் மீது மதுபோதையில் இருந்த இளைஞர்கள் கல்வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ரெட்டிபட்டி கிராமத்தில் நடந்த எருதுவிடும் விழாவின்போது அவ்வழியாக சென்ற தனியார் பள்ளி பேருந்துக்குள் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் பட்டாசுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதில் 6 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இது குறித்து விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் மீது போதையில் இருந்த இளைஞர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த காவல் ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இளைஞர்களை கைது செய்ய கோரியும், கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆனந்தூர் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.