கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், சுமார் 6,400 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
பீகார் தலைநகர் பாட்னா மற்றும் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியை குறுகிய தூர பயணத்தில் இணைக்கும் வகையில் கோடெர்மா – பர்ககானா இடையே 3,063 கோடி ரூபாய் மதிப்பில் இரட்டை வழித்தடம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோல், கர்நாடகாவின் பல்லாரி மற்றும் சிக்ஜஜூர் இடையே 185 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை வழிப்பாதை அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு புதிய ரயில்வே திட்டங்களால், 7 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 400-க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த 28 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.