மேகாலயாவுக்குத் தேனிலவுக்கு அழைத்துச் சென்று கணவனை தன் காதலனுடன் இணைந்து கூலிப்படை ஏவி மனைவி கொலை செய்த வழக்கில் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. மனைவியின் கண்முன்னே கணவன் கொலை செய்யப்பட்டிருப்பதும், அதற்குத் திட்டம் தீட்டிய சிசிடிவி காட்சிகளும் வெளியாகி நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியும் அவரது மனைவி சோனம் ரகுவன்சியும் தேனிலவுக்காக மேகாலயாவிற்குச் சென்றிருந்த நிலையில் இருவரும் மாயமானதாகப் புகார் எழுந்தது. கடந்த மே 23 ஆம் தேதி காணாமல் போன ராஜா ரகுவன்சி, ஜூன் 2 ஆம் தேதி மேகாலயாவின் கிழக்கு காசி மலையில் உள்ள வீசாடாங் அருவி அருகே 150 அடி பள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தேனிலவுக்குச் சென்ற இடத்தில் கணவன் கொலை செய்யப்பட்டதும் மனைவி மாயமானதும் காவல்துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்த விசாரணையும் தீவிரமடைந்தது.
ராஜா ரகுவன்சியின் மனைவி சோனம் ரகுவன்சி மேகாலயாவிலிருந்து சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தின் காஸிபுரில் கண்டுபிடிக்கப்பட்டார். மேகாலய காவல்துறை பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நடத்திய சோதனையில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சோனம் தாமாகவே முன்வந்து சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சோனம் பயணித்தது எப்படி ? இத்தனை நாட்களாக அவர் எங்குத் தங்கியிருந்தார் ? என்ற அடுக்கடுக்கான கேள்விகளும் எழத்தொடங்கின.
இந்த நிலையில், ராஜா ரகுவன்சியை அவரது மனைவி சோனம் தன் காதலனான குஷ்வாஹாவுடன் இணைந்து திட்டம் தீட்டி கூலிப்படை வைத்து கொலை செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சோனம் குடும்பத்திற்குச் சொந்தமான பிளைவுட் உற்பத்தி பிரிவின் பில்லிங் துறையில் பணியாற்றி வந்த குஷ்வாஹாவிற்கும், சோனமிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது. சோனாவின் குடும்பத்திற்கு அருகிலேயே வசித்து வந்த குஷ்வாஹா சமீபத்தில் வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்துள்ளார். அவ்வாறு குடிபெயர்ந்த நந்த்பாக் எனும் பகுதியில் தான் ராஜா ரகுவன்சியை கொலை செய்த மூவர் வசித்துவந்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜா ரகுவன்சி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளான விஷால் சவுகான், ஆகாஷ் ராஜ்புத் மற்றும் ஆனந்த் குர்மி ஆகிய மூவரும் குஷ்வாஹாவால் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்திற்கு அருகில் ராஜா மற்றும் அவரை கொன்ற மூவருக்குப் பின்னால் சோனம் நடந்து செல்வதைப் பார்த்ததாகச் சுற்றுலா வழிகாட்டி போலீசாரிடம் தெரிவித்தது இந்த வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கொலைக்குப் பயன்படுத்திய கூர்மையான ஆயுதமும் அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதே கொலை செய்தவர்களைக் கண்டறிவதற்கான அடிப்படை காரணமாகவும் அமைந்தது.
அதே நேரத்தில் ராஜா கொலை செய்யப்பட்ட நேரத்தில், அக்கொலையைத் திட்டமிட்ட குஷ்வாஹா இந்தூரிலேயே இருந்திருப்பதும் உறுதியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக ராஜாவின் உடல் இந்தூருக்கு எடுத்துவரப்பட்டு அவருக்கு நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வில் குஷ்வாஹா பங்கேற்றிருப்பதையும் வீடியோ பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் திருமணத்திற்கு பின்பும் தேனிலவுக்கு முன்பும் என இடைப்பட்ட நேரத்தில் குஷ்வாஹாவுக்கும், சோனம் ரகுவன்சிக்கும் இடையிலான தொலைப்பேசி உரையாடல் பலமணி நேரம் தொடர்ந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் மே 23ம் தேதி ராஜா கொலை செய்யப்பட்ட பிறகு குற்றம் நடந்த இடத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் சோனம் மற்றும் மூன்று குற்றவாளிகள் பேசிக் கொண்டிருக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதன் படி சோனம் கண்முன்பே அவரது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.
கொலை நடக்கும் போது சோனமின் ரெயின் கோட்டில் ரத்தக்கறை ஏற்பட்டதாகவும், அதனைக் குற்றவாளிகளில் ஒருவரான ஆகாஷிடம் வழங்கிய நிலையில் அந்த ரெயின் கோட்டும் அங்கேயே வீசப்பட்டதும் போலீசாரின் விசாரணையின் முக்கிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது. காதலனுடன் இணைந்து கூலிப்படையை ஏவி கணவனையே மனைவி கொலை செய்திருக்கும் சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.