குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் லியாகினர்.
ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம் வியாழக்கிழமை மதியம் 1.40 மணியளவில் லண்டனில் உள்ள கேட்விக் நகரை நோக்கி 242 பயணிகளுடன் புறப்பட்டது. இதனை 8,200 மணி நேரம் விமானத்தை இயக்கி அனுபவம் வாய்ந்த ஏர்-இந்தியா விமானத்தின் முதன்மை பைலட் சுமித் சபர்வால் இயக்கினார்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, மீண்டும் அகமாதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க ஏர்-இந்தியா விமானி அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேகானி நகர் குடியிருப்பு பகுதியின் மேலே 852 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தால் அப்பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்ததால், அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 53 பிரிட்டிஷார், கனடாவைச் சேர்ந்த ஒருவர், போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த 7 பேர் ஆகியோரும் அடங்குவர்.
இதனிடையே விமான விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். . சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிடோர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விமான விபத்தை தொடர்ந்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை தொடர்பு கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை கேட்டறிந்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.
விபத்து சம்பவத்தையடுத்து உடனடியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலை தொடர்பு கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.