அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் என்பவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார்.
ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம் வியாழக்கிழமை மதியம் 1.40 மணியளவில் லண்டனில் உள்ள கேட்விக் நகரை நோக்கி 242 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, மீண்டும் அகமாதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க ஏர்-இந்தியா விமானி அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேகானி நகர் குடியிருப்பு பகுதியின் மேலே 852 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தால் அப்பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்ததால், அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 242 பேர் பயணம் செய்த நிலையில் 241 பேர் பலியாகினர். பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் என்பவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார்.
பிரிட்டனில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இந்திய வம்சாவளியினரான விஸ்வாஸ், அண்மையில் இந்தியா வந்திருந்தார். மீண்டும் அவர் லண்டன் செல்லவிருந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளானது. அப்போது அவசர கால கதவை திறந்து அவர் உயிர் தப்பினார்.