குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி சென்ற விமானம் புறப்பட்ட 8ஆவது நிமிடத்திலியே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தின் 23 ஆவது ஓடுபாதையில் இருந்து லண்டன் நோக்கி பகல் 1.30 மணிக்கு 242 பேருடன் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787 விமானம், புறப்பட தயாரானது.
இந்த விமானத்தை 8,200 மணி நேரம் விமானத்தை இயக்கி அனுபவம் வாய்ந்த ஏர்-இந்தியா விமானத்தின் முதன்மை விமானி சுமித் சபர்வால் இயக்கினார்.
சரியாக 1.32 மணிக்கு கட்டுப்பாட்டு மையத்துடன் அனைத்து தகவல்களும் பரிமாறப்பட்ட நிலையில் பகல் 1.38 மணிக்கு விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
தொடர்ந்து விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் விமானம் புறப்பட்ட 3 ஆவது நிமிடத்தில் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு அபாய கட்டத்தில் விடுக்கப்படும் மே டே சமிக்ஞை விடுத்துள்ளார்.
மே டே சமிக்ஞை விடுக்கப்பட்ட சில மணி துளிகளில் விமானத்திற்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த விமானம் புறப்பட்ட 8 ஆவது நிமிடத்தில் சரியாக பகல் 1.46 மணிக்கு குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.