திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பேச்சு பெண்களையும், சைவ, வைணவ சமயங்களையும், இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளதாகத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என பதிவுத்துறைக்கு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தமிழக டி.ஜி.பி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு வழங்குமாறு பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், திமுக எம்.எல்.ஏ பொன்முடிக்கு எதிரான வழக்கு தொடர்பாகப் பதிலளிக்க வேண்டும் என டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 25ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.