விமான விபத்தில் இருந்து எப்படி பிழைத்தேன் என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து தப்பிய விஷ்வாஸ் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் விமான விபத்தில் இருந்து தப்பிய ஒரே நபரான பிரட்டனைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான விஷ்வாஸ் ரமேஷ்குமார், சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்த நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு விபத்து தொடர்பான தகவலை பகிர்ந்து கொண்டார்.
அதில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 11A இருக்கையில் பயணித்ததாகவும், விமானத்தில் தாம் அமர்ந்திருந்த பகுதி தரைத் தளத்தில் விழுந்ததாகவும் கூறினார். பின்னர், தனது இருக்கை பெல்ட்டை கழற்றிவிட்டு விமானத்தில் இருந்து வெளியே வந்ததாகவும் தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்டபோது தமது இடது கை எரிந்ததாகவும், தாம் பார்த்ததெல்லாம் பயணிகள் மற்றும் பணியாளர்களின் உடல்கள் மட்டுமே எனவும் வேதனையுடன் கூறினார். மேலும்,பிரதமர் மோடி நேரில் வந்து நலம் விசாரித்ததாகவும், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தன்னை நன்றாக கவனித்து கொண்டாகவும் விஷ்வாஸ் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.