தமிழகத்தில் டிரான்ஸ்ஃபார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2021 – 2023-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்ஃபார்மர்கள் கொள்முதல் செய்ய, ஆயிரத்து 182 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது.
டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஒப்பந்ததாரர்களை லாபமடையச் செய்ததன் மூலம் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு, விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க, மீண்டும் புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன், வழக்கின் விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.