உரிமை கோரப்படாத இறந்த நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இறந்துபோன அடையாளம் தெரியாத நபரின் கைரேகை மூலம் விவரங்களை வழங்க ஆதார் அமைப்புக்கு உத்தரவிடக்கோரி திண்டிவனம் டிஎஸ்பி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில், கைரேகைகள் தகவல்களை தடயவியல் நோக்கங்களுக்காக சேகரிப்பதில்லை என்றும், வழக்கில் மனுதாரர் கோரும் தகவல்களை வழங்குவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, திண்டிவனம் டிஎஸ்பி தாக்கல் செய்துள்ள மனு அபத்தமானது என கூறினார். மேலும், குற்ற வழக்கில் தீர்வு எட்ட, ஆதார் மட்டுமின்றி விசாரணைக்கு வேறு வழிகளும் உள்ளன எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.