33 ஆண்டுகளாக நடத்திய சட்டப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாகப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாரிசு தாரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நேரடி வாரிசுதாரர்கள் என கமுதி பகுதியைச் சேர்ந்த முத்துரத்தினம், நாகஜோதி, செல்வராணி, மணிகண்டன், வாசுகி, இந்திராணி ஆகியோர் 1993ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 6 பேரையும் முத்துராமலிங்கத் தேவரின் நேரடி வாரிசுதாரர்கள் என தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 33 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில், மேல ராமநதி பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய வாரிசுத்தாரர்கள், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தனர். முத்துராமலிங்கத் தேவருக்குச் சொந்தமான 32 ஏக்கர் நிலம், அரிய ஆபரணங்கள், பண்டைய கால ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் நீதிமன்ற உத்தரவுப்படி முறையாகப் பெற்றுப் பாதுகாப்போம் எனக் கூறினர்.