டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக சிதம்பரம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போரட்டங்களை குற்றச்செயலாக கருத முடியாது என தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்ததாகவும், தற்போது கடைகள் மூடப்படுவதற்கு பதிலாக வேறு இடத்திற்கு மாற்றப்படுதால் முக்கிய பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது எனவும் கூறினார்.
அமைதி போராட்டங்களில் பங்கேற்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்வது ஜனநாயக உரிமைக்கு எதிரானது எனக்கூறிய நீதிபதி, அப்படியென்றால் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய பெண்கள் மீதும் வழக்குத்தொடர வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்தார்.
மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகள் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.