சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரான நிலையில், முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
17 வயது சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது பூவை ஜெகன்மூர்த்தி ஆஜராக உத்தரவிட்டார்.
இதையடுத்து பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜரானபோது, கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் எம்.எல்.ஏ. ஆக்கினார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஆளும் கட்சி, எதிர்கட்சி என யாராக இருந்தாலும் மக்களுக்காக மட்டுமே சேவை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதி தொகுதிக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய எம்எல்ஏ தவறான செயல்களில் ஈடுபடலாமா என கேள்வி எழுப்பினார்.
ஆள் கடத்தல், கொலைதான் தங்கள் பாலிசி என எம்எல்ஏக்கள் நினைத்தால் சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என காட்டமாக கூறிய நீதிபதி, கட்சி மற்றும் அரசியல் போர்வையில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களை அழைத்து வந்தாலும் அஞ்ச மாட்டோம் எனத் தெரிவித்தார்.
ஆயிரம் பேர் வருவதால் தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என அரசியல்வாதி நினைக்க வேண்டாம் என கூறிய நீதிபதி வேல்முருகன், பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.