திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் செங்கம் சாலை காமராஜர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கார்த்தியாயினி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து பாஜகவினர் கண்டன முழக்கம் எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய வேலூர் பெருங்கோட்ட பாஜக தலைவர் கார்த்தியாயினி, அண்ணாமலையார் கோயிலில் இருவர் அசைவ உணவு உண்டது முதல் முறை அல்ல என்றும், இது வாடிக்கையாக நடைபெறுவதாகவும் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், அண்ணாமலையார் கோயிலில் அறநிலையத் துறை எந்தவித வசதிகளையும் செய்து தரவில்லை என்றும் கார்த்தியாயினி குற்றஞ்சாட்டினார்.