மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் திடலில், அறுபடை வீடுகளின் கண்காட்சியை காண வந்த 7 வயது சிறுவன் கந்த சஷ்டி கவசம் பாடி அனைவரையும் கவர்ந்தார்.
மதுரை பாண்டிக்கோவில் அருகேயுள்ள அம்மா திடலில் வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாடு நடக்கும் திடலில் அறுபடை வீடுகளின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.
இந்நிலையில், பிபி குளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் – மதுபாலா தம்பதியர் தங்கள் 7 வயது மகன் வெற்றிவேலுடன் கண்காட்சியை பார்வையிட்டனர். அப்போது பக்தி பரவசத்தில் சிறுவன் வெற்றிவேல் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் உள்ளிட்ட ஸ்லோகங்களை பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.
இதனிடையே மாநாட்டிற்கான பணிகள் குறித்து பேசிய இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார், மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மாநாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாக கூறினார்.