கோவையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி சூர்யாவை மாநகர எல்லையில் இருந்து வெளியேற உத்தரவிட்ட காவல்துறையினரை கண்டித்து, அக்கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் பக்ரீத் பண்டிகையையொட்டி பொது இடங்களில் மாடுகளை பலியிட தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் சூர்யா மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தார். இதனையடுத்து சூர்யா மத மோதல்களை உருவாக்குவதாகவும், அவரை 6 மாத காலத்திற்கு கோவை மாநகர எல்லையை விட்டு வெளியேறுமாறும் மாநகர காவல்துறை உத்தரவிட்டது.
இதற்கு எதிராக சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் காவல்துறையை கண்டித்து, இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஓம் கார் பாலாஜி தலைமையிலானோர் கண்களில் கருப்பு துணி கட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறை தனது உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.