இஸ்ரேல் பிரதமரின் எச்சரிக்கையை ஏற்று, டெஹ்ரானில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்துள்ள ஈரான், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் 5வது நாளாக நீடித்து வரும் நிலையில், ஈரானின் மேற்கு பகுதியிலிருந்து தலைநகர் டெஹ்ரான் வரை ஈரானின் வான் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாதது அவமானம் என்றும், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.