தென்னாப்பிரிக்காவை மீண்டும் தலை நிமிரச் செய்த முதல் கருப்பின கேப்டனான டெம்பா பவுமா குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்
இந்த கொண்டாட்டத்திற்கு முக்கிய காரணமானவர், தென்னாப்பிரிக்காவை மீண்டும் தலை நிமிரச் செய்தவர், தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின கேப்டனான டெம்பா பவுமா… யார் இந்த டெம்பா பவுமா? தென்னாப்பிரிக்காவின் 27 வருட கனவு எப்படி இவரால் சத்தியமானது? கேப் டவுன் அருகிலுள்ள லாங்கா பகுதியில் பிறந்தவர் பவுமா. இன ஒடுக்குமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட இவர், சந்திக்காத துயரங்களே இல்லை.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான பவுமா, நிறத்தை காரணம் காட்டி தொடர்ச்சியாக மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டு வந்தார். 2014ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் அறிமுகமானபோது, மற்ற பார்மெட்களில் அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இருப்பினும் அவரது தலைமைப் பண்பைக் கருத்தில் கொண்ட அணி நிர்வாகம், குவின்டன் டீ காக் விலகலுக்கு பிறகு பவுமாவிற்கே முன்னுரிமை வழங்கியது.
ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருந்த பவுமா, 2023ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவை வழிநடத்தி, தான் விளையாடிய 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றியை பெற்று தந்தார். மேலும், அரையிறுதிக்கும் அழைத்து சென்றார்.
பவுமா 2021ம் ஆண்டுக்கு பிறகு வெள்ளை பந்து கேப்டன்சியை தொடர்ந்தாலும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் செய்த சம்பவே இன்று புதிய வரலாற்றை எழுதியுள்ளது. அப்போது டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த டீன் எல்கருக்கு பதிலாக பவுமாவை கேப்டனாக நியமித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் கான்ராட்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின டெஸ்ட் கேப்டன் என்ற வரலாற்றை பவுமா படைத்தார். பயிற்சியாளரின் முடிவு மீதும், பவுமாவின் திறமை மீதும் நம்பிக்கை இருந்தாலும், ஏபி டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெயின், மோர்னே மொர்க்கல் போன்றவர்களின் ஓய்வுபெற்ற பிறகு, பவுமாவின் தலைமைப் பண்பு குறித்து சந்தேகம் எழுந்தது.
இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் பவுமா-கான்ராட் கூட்டணி வெற்றிகரமாகத் தொடர்ந்தது. 10 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்தி 9 வெற்றிகளைப் பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் பவுமா.
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் நான்கு இடங்களைகூட பிடிக்காது எனப் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் போராடி அணியை இறுதிப் போட்டிக்கு அவர் அழைத்து சென்றார். WTC இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை நெருக்கடிக்குள்ளாக்கியது. இரண்டாவது நாளில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இனிங்ஸில் 138 ரன்களில் ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் 282 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட, முழு உடல் வலியை தாங்கிக்கொண்டு, தன் ஹாம்ஸ்ட்ரிங் காயத்துடன் 66 ரன்கள் எடுத்தார். அவருடன் 2014 U19 ஹீரோ மார்க்ரம் நிலைத்து ஆடவே, இருவரும் 3வது விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் வெற்றியும் வசமானது. தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டு விதியாசத்தில் வெற்றிக் கோப்பையை முத்தமிட்டது.
பல வருடங்களாக ஜோக்கர்ஸ் என்ற புனைப்பெயருடன் வலம் வந்த தென்னாப்பிரிக்காவை, தி லெஜண்ட்ஸ் என அனைவராலும் பாராட்டும்படி செய்தார் இந்த கருப்பின கேப்டன் டெம்பா பவுமா. போட்டிக்குப் பிறகு பேசியபோது கூட, “நம்மை போல பிளவுபட்ட நாட்டுக்கு, இது ஒற்றுமையாக மகிழ்வதற்கான ஒரு வாய்ப்பு. எங்கள் மக்கள் இதை உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். நாங்களும் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோம்” எனக் குறிப்பிட்டு ஒற்றுமையை வலியுறுத்தினார்.
டெம்பா என்ற வார்த்தைக்கு நம்பிக்கை என்று பொருளாம். ஒரு காலத்தில் பிரிட்டனால் அடிமையாக்கப்பட்டுக் கிடந்த கறுப்பினத்தைச் சேர்ந்த டெம்பா பவுமா, இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அதே பிரிட்டன் மக்களின் கரகோஷத்திற்கு இடையே வெற்றிக்கான கோலை கைகளில் ஏந்தி உலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இன பிரிவினையை ஒழிக்க, பவுமாவே ஒரு சான்று என்கிறது கிரிக்கெட் உலகம்.