நாமக்கல்லில் சரக்கு லாரி உரிமையாளர்களின் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தால் 2 ஆயிரம் டன் அரிசி, சரக்கு ரயிலில் தேக்கமடைந்துள்ளன.
நாமக்கல் – சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கும், கோழிப் பண்ணைகளுக்கும் தேவையான பொருட்கள் சரக்கு ரயிலில் கொண்டு வரப்படுகின்றன. பின்னர் லாரிகள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த சூழலில், லாரிகளில் ஏற்றப்படும் சரக்குகளுக்கு டன் ஒன்றுக்கு 140 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக 10 ரூபாய் குறைத்து 130 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. டெண்டர் எடுத்துள்ள நபர்களிடம் இதுகுறித்து பலமுறை கேட்டபோதும் அவர்கள் உரிய விளக்கம் அளிக்காததால், லாரி உரிமையாளர்கள் திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வந்துள்ள சுமார் 2 ஆயிரத்து 400 டன் அரிசி, சரக்கு ரயிலில் தேக்கமடைந்துள்ளது.