நெல்லை அருகே மகளைக் கொலை செய்த தந்தை, தன்னை சரியாக கவனிக்காததால் மகளை அடித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் வசித்து வரும் கட்டட தொழிலாளியான காளிமுத்து என்பவரின் மனைவி ஜெயலட்சுமி இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் அடித்து கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், வீட்டில் இருந்து மாயமான ஜெயலட்சுமியின் தந்தை வேலுவை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், மேலப்பாளையம் பகுதியில் மரத்தடியில் அமர்ந்திருந்த வேலுவை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தன்னை சரியாக கவனிக்காததால் மகள் ஜெயலட்சுமியை மண்வெட்டியால் அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வேலுவை கைது செய்த போலீசார், உடல்நலக் குறைவு காரணமாக அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.