ஏர் இந்தியா – 171 விமான விபத்துக்கு டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவன தலைவர் என்.சந்திரசேகரன் மன்னிப்பு கோரியுள்ளார்.
தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என்றும், இது கடினமான தருணம் எனவும் தெரிவித்தார். டாடா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதை எண்ணி மிகவும் வருந்துகிறேன் என தெரிவித்த அவர், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அனைத்தையும் செய்வோம் என கூறினார்.
விமான விபத்து தொடர்பான விசாரணை முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும் எனக்கூறிய அவர், விபத்துக்குள்ளான AI-171 விமானம் குறித்து இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை என தெரிவித்தார். விமானத்தின் வலது எஞ்சின் மார்ச் 2025ஆம் ஆண்டு வாங்கப்பட்டது என்றும், இடது எஞ்சின் கடைசியாக 2023-ல் சர்வீஸ் செய்யப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக AI-171 அறக்கட்டளையை உருவாக்க உள்ளதாகவும், அதன் மூலம் நிதி மற்றும் பிற தேவைகளை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க உள்ளதாகவும் ஏர் இந்தியா தலைவர் என்.சந்திரசேகரன் தெரவித்தார்.