கோயில்களில் பக்தர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அது தொடர்பான பணிகளுக்கு அனுமதி அளித்த குழுவில் ஆகம நிபுணர்கள் இடம்பெறவில்லை எனக் கூறியிருந்தார்.
கோயிலில் இருந்த 24 புனித தீர்த்தங்கள், கல் தூண்கள் ஆகியவை தற்போது நடைபெற்று வரும் பணிகளால் காணாமல் போயுள்ளன என்றும் அவை மீண்டும் நிறுவப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
கோயில்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சடங்குகளுக்கு முரணாக பணிகள் நடைபெறுவதோடு திருக்கோயில் நிதியை தவறாக
பயன்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், கோயில்களின் உள்ளே பக்தர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுவதாகவும் அதனை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பக்தர்கள் நிம்மதி தேடி கோயிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து தருவதில்லை எனக் கூறிய நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரை அணுக உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.