மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை மாதிரி கோயில்களில் மூன்றாவது நாளாக ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ஆம் தேதி மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், ஆதீனங்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோயில்களின் மாதிரி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தனி சன்னதிகளில் வேல்களுடன், அறுபடை வீடு கோயில்களின் மூலவர்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், 3வது நாளாக பக்தர்கள் ஆர்வத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர் அந்தந்த SP அலுவலகத்தில் விண்ணப்பித்து வாகன அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று, இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.