இந்தியா – பாகிஸ்தான் உடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவுடனான போரை கைவிட்டதற்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை நேரில் அழைத்து நன்றி தெரிவித்ததாக கூறினார்.
இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் அமெரிக்கா ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் என கூறினார். போரை தொடர வேண்டாம் என முடிவு செய்த இருநாட்டு தலைவர்களும் புத்திசாலிகள் என தெரிவித்த அவர், இந்தியாவும், பாகிஸ்தானும் பெரிய அணுசக்தி கொண்ட நாடுகள் என குறிப்பிட்டார்.
மேலும், பாகிஸ்தான் ராணுவ தளபதியை சந்தித்ததை எண்ணி பெருமைப்படுகிறேன் என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.