சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ வழித்தட பணித்தளத்தில் ராட்சத கர்டர் விழுந்து இளைஞர் உயிரிழந்த விபத்தில், எல் அண்ட் டி நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சென்னை சோழிங்கநல்லுார்-மாதவரம் வழித்தடத்தில் போரூர் முதல் நந்தம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்வே மேம்பாலத்தின் கீழ் 30 அடி உயரத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் இணைப்பு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக, இரண்டு துாண்கள் மத்தியில் கர்டர் எனும் ராட்சத கான்கிரீட் பாலம் அமைக்கும் பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ராமாபுரம் பகுதியில் கடந்த 12ஆம் தேதி ராட்சத கான்கிரீட் சரிந்து சாலையில் விழுந்த விபத்தில் ரமேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்தில் பணியாற்றிய எல் அண்ட் டி நிறுவன ஊழியர்களிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சம்பவத்திற்கு முதன்மையான பொறுப்பு, ஒப்பந்ததாரருக்கே உண்டு என்றும், அதன்படி ஒப்பந்த நிறுவனத்துக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கவனக்குறைவாக செயல்பட்ட 4 பொறியாளர்கள், மெட்ரோ திட்டப்பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.