குலசேகரம் அருகே காதல் விவகாரத்தில் உயிரிழந்த மகனின் மரணம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் காவுவிளை காலனியைச் சேர்ந்த தனுஷ் என்பவர் கல்வெட்டாங்குழி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைப் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கல்லூரி படிப்பை முடித்தாலும் இளம்பெண் உடனான காதல் நீடித்து வந்த நிலையில், சாதி மற்றும் மதத்தைக் காரணம் காட்டி இளம்பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், இளம்பெண்ணின் வீட்டு மொட்டை மாடியில் தனுஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தனது மகன் மதம் மாறுவேன் என்று கூறியபோதும் பெண் வீட்டார் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள தனுஷின் தந்தை, சாதியைக் காரணம் காட்டி தனது மகனைக் கொலை செய்துவிடுவோம் எனப் பெண் வீட்டார் பலமுறை மிரட்டியதாகக் கூறினார்.