மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்களுக்கு அனுமதி பாஸ் தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வருகை தரும் பக்தர்கள், அந்தந்த மாவட்டங்களில் வாகனத்திற்கான அனுமதி பாஸ் வாங்க வேண்டும் எனத் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து இந்து முன்னணி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்து முன்னணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை எனவும் வாகன அனுமதி பாஸ் இருந்தால் மட்டுமே மதுரை மாவட்டத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என்று உத்தரவிட அண்ணா நகர் காவல்துறை இணை ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டார்.
தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிகளவில் மக்கள் கூடும் மாநாடுகளுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்த அனுமதி பாஸ் வழங்குவது வழக்கமான நடைமுறை எனவும் அதற்கான உத்தரவை, தலைமைக் காவலருக்கு மேல் உள்ள அதிகாரிகள் பிறப்பிக்கச் சட்டம் உள்ளதாகவும் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்களுக்கு அனுமதி பாஸ் தேவையில்லை என உத்தரவிட்டனர்.
மாநாட்டில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் காவல்துறை சோதனை மையம் அமைக்க வேண்டும் எனவும் வாகன காப்பீடு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வாகனப் பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை வழங்கிய பிறகே அனுமதியளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.