போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்த நிலையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது மருத்துவ பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் நடைபெற்ற மோதல் தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பிரசாத்துக்கு போதைப்பொருள் வினியோகம் செய்ததாக பிரதீப் குமார், ஜான் ஆகிய இருவரைக் கைது செய்த போலீசார் 11 கிராம் கொக்கைன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் பிரசாத் மூலமாகப் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீகாந்தை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு நுண்ணறிவு போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
பரிசோதனையின் முடிவில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது நிரூபணமாகியுள்ளது. இதையடுத்து நடிகர் கிருஷ்ணாவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.